Published : 14 Mar 2019 08:52 AM
Last Updated : 14 Mar 2019 08:52 AM

சிம்பு எனக்கு சினிமா வாத்தியார்: நடிகர் ஹரீஷ் கல்யாண் நெகிழ்ச்சி

சிந்து சமவெளி, `பொறியாளன்', `வில் அம்பு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் `பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஹாட் பாயாக வலம் வருபவர் ஹரீஷ் கல்யாண். தற்போது மீண்டும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் மூலம் களமிறங்கும் ஹரீஷ் கல்யாணிடம் பேசியதில் இருந்து:

நீங்கள் நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஒரு புதுமுகம் போலவே திரைத்துறை உங்களைப் பார்க்கிறதே..?

மிக இளைய வயதிலேயே நடிக்க வந்துவிட் டேன். இப்போது இளமைப் பருவத்தில் இருக் கிறேன். அடுத்த கட்டத்துக்கு போகும்போது தான் அடுத்த மாற்றம் தெரியும். அந்த மாற் றம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் மூலம் நடக்கும் என நம்புகிறேன். அப்பா வித்தனமான, வெகுளியான கதாபாத்திரங் களில்தான் இதுவரை நடித்து வந்தேன். அதில் இருந்து மாறி இந்தப் படத்தில் கொஞ்சம் மெச்சூர்டான கதாபாத்திரமாக என்னை திரையில் பார்ப்பீர்கள்.

உங்கள் கதைகளை எந்த வகையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

`பியார் பிரேமா காதல்' போல அடுத்த படம் இருக்கக் கூடாது என்றுதான் இ.ரா. இ.ராபடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதே சமயம், பி.பி.காதல் படத்தை ரசிகர்களுடன் பார்க்கும்போது, எனது நகைச்சுவை நடிப் புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, அடுத்து அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இந்தப் படம் சீரியசான படம். இப்படி எனது முந்தைய படங்களின் வரவேற்பை பொறுத்து தான் எனது அடுத்தடுத்த படங்களின் கதைகளை நான் தெரிவு செய்கிறேன். என் படங்கள்தான் என் நிறை குறைகளைக் காட்டும் கண்ணாடி. `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பார்த்த பிறகு இதில் எனது ரசிகர்கள் என்னிடம் என்ன ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டுவிடுவேன்.

`பியார் பிரேமா காதல்' வெற்றிக்குப் பிறகு அதே மாதிரியான கதைகள் அடுத்தடுத்து உங்களைத் துரத்தியிருக்குமே?

ஆம், நீங்கள் சொல்வது மாதிரிதான் துரத்தியது. அந்தப் படக்குழுவினருடன் மீண்டும் அணி சேரலாம் என்றுகூட ஒரு திட்டம் இருந்தது. ஆனால் அது கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடரலாம் என நினைத்தோம். அடுத்தடுத்தும் ஒரே மாதிரியான படங்கள் எடுபடுமா என்கிற எங்கள் அச்சமும் இதற்குக் காரணம். சச்சின் ஒரு சதமடித்து விட்டு 4 போட்டிகளில் சரியாக ஆடாமல் மீண்டும் சதமடித்தால்தான் அதில் நமக்கு உற்சாகம் கிடைக்கும். எல்லா போட்டிகளிலும் அடித்தால் அதில் சுவாரஸியம் இருக்காதுதானே.

`பொறியாளன்', `வில் அம்பு', `பியார் பிரேமா காதல்' இந்த மூன்று படங்களும் உங்களுக்குள் ஏற்படுத்திய புரிதல் என்ன?

'பொறியாளன்' சினிமாவை பற்றி, ஒரு ஹீரோ என்றால் யார் என்பதைப் பற்றி எல்லாம் ஒரு புரிதலைக் கொடுத்தது. `வில் அம்பு' ஒரு நடிகனாக வேறொரு பரிமாணத்தைக் காட்ட உதவியது. `பியார் பிரேமா காதல்' என்னை இன்னொரு தளத்துக்கு கூட்டிச் சென்றது. நாம் என்ன நடித்து, எவ்வளவு கஷ்டப்பட்டாலும், வெற்றி வரும் வரை நமது அடையாளம் ஒரு குறுகிய வட்டத்தில்தான் இருக்கும் என்பதை புரியவைத்தது. கூடவே ரொமாண்டிக் ஹீரோ என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

உங்கள் நடிப்பு வாழ்க்கை நிலையில் லாமல் இருந்ததால்தான் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைய காரணமா?

அந்த சமயத்திலேயே நான் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் இருந்தேன். ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் வேறொரு கதை. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஒரு படம். அப்போதுதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. எனது நெருங்கிய நண்பர் ஒருவர் நான் கண்டிப்பாக பிக்பாஸில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த 50 நாட்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். மகிழ்ச்சியுடன் தங்கி விட்டு வாருங்கள் என்றார். சரி போகலாம் என முடிவெடுத்தேன். நான் போகும் முன் ரஞ்சித் சாரிடம் சொன்னேன். உங்களுக்கு நல்லது என்றால் செய்யுங்கள் என்றார். எஸ்.ஆர்.பிரபு சார் தயாரிப்பு அப்போது நடக்காது என்பது போல இருந்தது. சரி பாதை தெளிவாக இருக்கிறது என பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றேன்.

அந்த 50 நாட்கள் உங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றியதா?

ஆமாம். நிறைய கற்றுக் கொண்டேன். புரிந்துகொண்டேன். வெளியே வரும்போது ரசிகர்களுக்கு நான் யார் என்று தெரிந்தது. இப்படி ஒருவன் இருக்கிறான் என உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டியது. பிக் பாஸ் பிரபலம் என்று என்னைப் பார்த்தாலும், நான் படத்தில் நடித்து அது ஹிட்டானால்தான் எனக்கென ஒரு பெயர் கிடைக்கும். அது 'பியார் பிரேமா காதல்' மூலம் நடந்தது.

உங்கள் நெருங்கிய நண்பர் சிம்புவின் வழிகாட்டுதல் இருக்கிறதா?

அவர் எனக்கு சகோதரனைப் போல. எனது முக அமைப்புக்கு ஏற்றவாறு எப்படி முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? எப்படி நிற்க வேண்டும்? எப்படி மேக்கப் போட வேண்டும் என்பது போல நடிப்பில் சின்ன சின்ன விஷயங்களைச் சொல்லித் தருவார். சிம்பு எனக்கு சினிமா வாத்தியார் `பி.பி. காதல்’ படம் பார்த்துவிட்டு என்னையும், இயக்குநரையும் அதிகம் பாராட்டினார்.

முத்தக் காட்சிகளில் நீங்கள் இயல்பாக நடிப்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே?

நீங்கள் வேண்டுமென்றால் ரைசாவிடம் கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று. இந்தப் படத்திலும் முத்தக் காட்சிகள் உள்ளன. ஆனால், எல்லா படங்களிலும் முத்தக் காட்சி வைத்தால் அதுவே ஒரு பிராண்ட் போல ஆகிவிடும். அதனால் அடுத்தடுத்த எனது படங்களில் அப்படியான காட்சிகள் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x