

மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சிவகார்த்திகேயனை நடிகராக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாண்டிராஜ். 'மெரினா' மற்றும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அதற்குப் பிறகு இருவரும் இணைந்து பணிபுரியவே இல்லை. ஆனால், இருவரும் அளித்த பேட்டிகளில் மீண்டும் இணைவோம் என்று மட்டுமே குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
2018-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
அக்கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. பட்ஜெட் விஷயங்கள் பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியவே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தை தயாரிக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது, சிவகார்த்திகேயனுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தேர்வில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் பாண்டிராஜ். விரைவில் எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை அறிவிக்கவுள்ளது படக்குழு.