

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை, பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில், இப்படத்துக்காக போட்டோ ஷுட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை ஏப்ரலில் தொடங்கி, தீபாவளிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மேலும், படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக கொண்டுவரலாம் என்றும் ஆலோசனை செய்துள்ளனர்.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் போது, பட வெளியீட்டையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.