

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களின் இசையமைப்பில் கவனம் செலுத்திவரும் பவதாரிணி இளையராஜா, இப்போது அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயநதி’ திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அபிசரவணன், வெண்பா நடிப்பில் பெற்றோர் பாசத்தையும், இளைய தலைமுறை காதலையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் ஒரு மருத்துவ மாணவியின் பின்னணியில் கதை நகரும் விதமாக உருவாகிறது. ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் அசோக் தியாகராஜன் கூறும்போது, ‘‘அடிப்படையில் நான் ஒரு மருத்துவர். கலை மீதான ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்தேன். டீன் – ஏஜை கடக்கும் இள வயது பருவத்தினரது காதலையும், பெற்றோர் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ‘மாயநதி’ திரைப்படத்தின் திரைக்கதை விரியும்!’’ என்றார்.