தெலுங்கில் திரையரங்குகள் கிடைக்காமல் திணறும் பேட்ட

தெலுங்கில் திரையரங்குகள் கிடைக்காமல் திணறும் பேட்ட
Updated on
1 min read

ஜனவரி 10-ம் தேதி தெலுங்கில் 2 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால், திரையரங்குகள் கிடைக்காமல் திணறி வருகிறது 'பேட்ட'

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. ஆனால், இதே தேதியில் தெலுங்கில் திரையரங்குகள் கிடைக்காமல் திணறி வருகிறது.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் முதலில் பேட்ட' படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிடலாம் என்று தான் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியீடு என்று 'பேட்ட' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கியது. ஆனால், பாலகிருஷ்ணா மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களுக்கே சுமார் 90% அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளது.

இதனால், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே 'பேட்ட' படத்துக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கில் ரஜினி படங்களில் மிகக் குறைவான திரையரங்குகளில் வெளியான படம் என்ற பெயரை 'பேட்ட' எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாவதால், 'விஸ்வாசம்' படக்குழுவினர் தங்களுடைய படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in