எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்: பி.டி.செல்வகுமார் குற்றச்சாட்டு

எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்: பி.டி.செல்வகுமார் குற்றச்சாட்டு
Updated on
2 min read

எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என தயாரிப்பாளரும், மக்கள் தொடர்பாளருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

'சர்கார்' இசை வெளியீட்டில் விஜய் பேசியதில் இருந்து, அவரைப் பற்றிய அரசியல் விவாதங்கள் தொலைக்காட்சிகளில் இடம்பெற்றன. இதில் பலரும் கலந்து கொண்டு விஜய் பற்றிய தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில், விஜய்யின் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிந்த பி.டி.செல்வகுமாரும் கலந்துகொண்டு, தன்னுடைய கருத்துகளைக் கூறினார். 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பி.டி.செல்வகுமார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், பி.டி.செல்வகுமார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, “விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்” என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை உருவானது.

எனவே, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “முன்னாள்  மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாகப் பணிபுரிந்தவர், தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில் விஜய்யுடன்  இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன். மேலும், அவர், நமது மக்கள் இயக்கத்தில் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை.

இருப்பினும், விஜய் பெயரைப் பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்தக் கருத்தை, விஜய் கருத்தைப் போல் ஊடகங்களில் வெளியிடுவதை விஜய் ஏற்கவில்லை என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

அத்துடன், விஜய் எந்தக் காலகட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பிட்டுப் பேசியதில்லை. அப்படி யாரையும் பேசச்சொல்லி யாருக்கும் விஜய் அதிகாரம் அளிக்கவில்லை  என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆகவே, விஜய் குறித்த தகவல்களை ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

“விஜய்க்கும், அவருடைய அப்பாவுக்கும் நான் 25 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கையுள்ள மனிதராக, மக்கள் தொடர்பாளராக, அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தேன். பேட்டி கொடுப்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேட்டி கொடுக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தைத்தான் நான் பதிவு செய்திருந்தேன்.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யும் செயலாகத்தான் எனக்குத் தெரிகிறது. நான் எந்தளவிற்கு உண்மையானவர் என்பது விஜய்க்கும் தெரியும். அவருடைய குடும்பத்தாருக்கும் தெரியும். என்மீது நம்பிக்கை இருந்ததால்தான், எனக்கு ‘புலி’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

நான் விஜய்க்கு மக்கள் தொடர்பாளராக மட்டுமில்லாமல், ரசிகனாகவும் இருந்து வந்தேன். தற்போதும் அப்படித்தான் இருந்து வருகிறேன். இளையராஜாவின் ராயல்டி தொகைக்கு எதிராகக் குரல் கொடுப்பது, ஒரு தயாரிப்பாளராக சக தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

விஜய்யின் ‘ஆதி’, ‘தலைவா’, ‘காவலன்’, ‘மெர்சல்’ போன்ற படங்களின் பிரச்சனைகளின்போதும் அவருடன் இருந்துள்ளேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனையான படம் என்றால், அது ‘புலி’ படம் தான். ‘காவலன்’ பட ரிலீஸின்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக பிரச்சினை செய்தபோது கூட, நான் 50 லட்சம் கடன் வாங்கி அந்தப் படத்தை ரிலீஸ் செய்தேன். இது அனைவருக்குமே தெரிந்த உண்மை.

அவர் மீது அன்பும் மரியாதையும் இருப்பதால்தான், என்னால் உண்மையான உழைப்பைக் கொடுக்க முடிந்தது. ‘புலி’ படத்தின்போது ஐடி ரைடு வந்தபோதும் கூட அவருக்குத் துணையாக இருந்தேன். தற்போது விஜய்க்கு பி.ஆர்.ஓ-வாக இல்லை என்றாலும், அவருடன் நல்ல குடும்ப நண்பராகத்தான் இருந்து வருகிறேன். மேலும், விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.

தற்போதும் நான் பல படங்களுக்கு பி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படம் பிரச்சினைகளைச் சந்தித்தபோது, அதனைத் தீர்த்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையச் செய்தேன்.

இன்றுவரை நான் விஜய்க்கும், விஜய் குடும்பத்துக்கும் உண்மையான விசுவாசம் உள்ள மனிதராகத்தான் இருந்து வருகிறேன். எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in