‘பவர்ஸ்டார்’ சீனிவாசனை காணவில்லை: மனைவி புகாரால் பரபரப்பு

‘பவர்ஸ்டார்’ சீனிவாசனை காணவில்லை: மனைவி புகாரால் பரபரப்பு
Updated on
1 min read

நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொய்ப்புகார் அளித்ததை அடுத்து போலீஸார் அவரை எச்சரித்துள்ளனர்.

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். பலவேறு சர்ச்சைகளில் சிக்கியவர். தமிழ்த்திரையுலகில் இரண்டுக்கும் மேற்பட்ட சொந்தப்படங்கள் எடுத்தவர், கண்ணா லட்டுத்தின்ன ஆசையா உட்பட பலப்படங்களில் நடித்தவர். மோசடி குற்றத்தில் பல முறை சிறைச்சென்றவர்.

 நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நிலமோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி புகார்கள் உள்ளது. குறிப்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் கட்டுமான நிறுவன தொழிலதிபரிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ரூ.10 கோடியை பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கியதாக எழுந்த புகாரில் டெல்லிப் போலீஸார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்றும் பரபரப்பு செய்தியாக மாறினார். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அண்ணாநகரில் வீடு உள்ளது. நேற்று மாலை அவரது மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார். பணத்துடன் சென்ற தனது கணவர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை அவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்று புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் சீனிவாசனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவரது செல்போனை ட்ரேஸ் செய்தனர். அவரது செல்போன் ஊட்டியில் காட்டியது. உடனடியாக போலீஸார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரே எடுத்து பேசியுள்ளார்.

தான் கடத்தப்படவில்லை என்றும், ஒரு இடம் ரெஜிஸ்ட்ரேஷன் சம்பந்தமாக ஊட்டிவரை வந்துள்ளதாகவும் நாளை சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் மனைவி உங்களை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் என்று போலீஸார் கூற அப்படியா அவர் என்னுடன்தான் உள்ளார் என்று போலீஸாரிடம் பவர்ஸ்டார் கூறியுள்ளார்.

போனை அவரது மனைவியிடம் கொடுக்கச்சொன்ன போலீஸார் புகார் கொடுத்துவிட்டு ஊட்டியில் கணவருடன் இருக்கிறீர்களே ஏன் எங்களுக்கு தகவல் சொல்லவில்லை, போலீஸ் புகார் உங்களுக்கு விளையாட்டு விஷயமா என்று கேட்டுள்ளனர். போலீஸாரிடம் பவர்ஸ்டார் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பவர்ஸ்டாரை காணவில்லை எனபுகார் அளித்த அவரது மனைவி ஜூலி பின்னர் அவர் ஊட்டியில் இருப்பது தெரிந்து அங்கு சென்றிருக்கிறார். புகார் கொடுத்தவர் போலீஸில் மீண்டும் விபரத்தை கூறாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in