

இன்று (டிச.24) மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சங்கத்தைப் பூட்டியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ள ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.
டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விஷால், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் பாண்டி பஜார் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விஷால் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடும் சர்ச்சைகளைச் சந்தித்து வரும் வேளையில் இன்று (டிசம்பர் 24) மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், யாரெல்லாம் பூட்டு போடும் பிரச்சினையில் ஈடுபட்டார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இளையராஜா இசை நிகழ்ச்சி எப்படியெல்லாம் நடத்துவது என்பது குறித்தும் விவாதித்து இறுதிமுடிவு எடுக்கவுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.