

‘கனா’ படத்தில் என்னுடைய கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் என்று பெயர் வைத்தது குருவுக்குச் செய்த சிறிய மரியாதை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது தயாரிப்பாளராகவும் ப்ரமோஷனாகியிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கனா' படம், இவர் தயாரித்ததுதான். இந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலரும் சிவகார்த்திகேயனுடன் திருச்சி கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது 'கனா' படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் வந்திருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் கூறியதாவது:
''கடந்த பத்து வருடங்களாக நெல்சன் சாருடன் பழக்கம் எனக்கு. என்னை, எனக்குள் இருக்கும் திறமையை நன்கு அறிந்து, என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.
அவர் அப்போதே படம் பண்ணுவதாக இருந்தது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டபோது, அந்தக் கதை விவாதங்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். சிலநாட்களில், என் கல்லூரி நண்பனும் 'கனா' படத்தின் இயக்குநருமான அருண்ராஜா காமராஜையும் நெல்சனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன். அவனையும் அவர் சேர்த்துக்கொண்டார்.
அவரிடமிருந்துதான் சினிமா பற்றிய புரிதல்கள் எங்களுக்குக் கிடைத்தன. பாடல்கள் எழுதிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்த அருண்ராஜாவை, டைரக்ட் பண்ணுடா என்று சொன்னதால், இந்த 'கனா' கதையைச் சொன்னான். அதில் நான் கெஸ்ட் ரோலில் வரும் போர்ஷன் பகுதி வந்தது. பார்த்தால், அந்தக் கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் என்று அருண் பெயர் வைத்திருந்தான். எனக்கும் அருணுக்கும் நெல்சன் குரு ஸ்தானம். எனவே குருவுக்குச் செய்யும் மரியாதையாக அந்தக் கேரக்டருக்கு அவருடைய பெயரை வைத்திருந்தது மனதில் நிறைவைத் தந்தது. சட்டென்று என் மனசுக்குள் ஒரு சந்தோஷம்.
'கனா' படத்தில் வரும் அந்த நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரப் பெயர், 'கோலமாவு கோகிலா' படத்தின் டைரக்டரான எங்கள் குருவுக்கு செய்த சிறிய மரியாதை''.
இவ்வாறு பணிவுடனும் அன்புடனும் சொன்னார் சிவகார்த்திகேயன்.