Published : 31 Dec 2018 07:09 PM
Last Updated : 31 Dec 2018 07:09 PM

பேட்ட அப்டேட்: கேரள உரிமையைக் கைப்பற்றிய பிருத்விராஜ்

'பேட்ட' படத்தின் கேரள விநியோக உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இதன் விநியோக உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

இப்படத்தின் கேரள விநியோக உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார். பிருத்விராஜ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் இணைந்து இதன் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிருத்விராஜ் கூறுகையில், ''தலைவர் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'பேட்ட' படத்தின் கேரள உரிமையை நானும், லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து கைப்பற்றியுள்ளோம். எனக்கு பிடித்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படம் கேரளாவில் 2019, ஜனவரி 10-ம் தேதி 2000-க்கும்  மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும். தலைவர் மாஸுடன் திரும்பியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

'பேட்ட'  ட்ரெய்லர் டிசம்பர் 28-ம் தேதி வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பழைய ரஜினியைக் கொண்டுவந்துள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் 'பேட்ட' ட்ரெய்லரைப் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x