

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. இக்கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
'டிமான்டி காலனி' படத்தைத் தொடர்ந்து நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
'இமைக்கா நொடிகள்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் அஜய் ஞானமுத்து. முந்தைய படத்தைப் போலவே, இதிலும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.
முழுக்கதையையும் முடித்துவிட்டு, விக்ரமிடம் கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து. அவருக்கு கதை பிடித்திருந்ததால், உடனடியாகத் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இதனால், 'கடாரம் கொண்டான்', 'மகாவீர் கர்ணா' ஆகிய படங்களுக்கு இடையே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம்.
இக்கூட்டணி இணையும் படத்தைத் தயாரிக்க, முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர்.