

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு 'சீகடி கடிலோ சித்தா கொட்டுடு' என தலைப்பிட்டுள்ளனர். மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடிப் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். சிலர் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்ததால், ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார். 'சீகடி கடிலோ சித்தா கொட்டுடு' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆதித் அருண் நாயகனாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே, தெலுங்கு ரீமேக் போஸ்டரையும் வடிவமைத்துள்ளனர்.