பா.இரஞ்சித் தயாரிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

பா.இரஞ்சித் தயாரிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’
Updated on
1 min read

பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்துக்கு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘அட்டகத்தி’ மூலம் இயக்குநரான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பா.இரஞ்சித்.

இதற்கிடையில், தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்தார். மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில், கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்தனர். சாதிப் பாகுபாட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.

பெரும்பாலானவர்கள் கொண்டாடிய இந்தப் படம், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. வருகிற 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் பா.இரஞ்சித். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, அதியன் ஆதிரை இயக்குகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா இசையமைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in