கஜா புயல் பாதிப்பு: தமிழக முதல்வரை மறைமுகமாக கிண்டல் செய்யும் கருணாகரன்

கஜா புயல் பாதிப்பு: தமிழக முதல்வரை மறைமுகமாக கிண்டல் செய்யும் கருணாகரன்
Updated on
1 min read

சென்னையில் மழை பெய்கிறதே இப்போது டெல்லி சென்ற முதல்வர் இங்கு திரும்பி வருவாரா இல்லை அங்கேயே தங்கிவிடுவாரா? எனக் கிண்டல் செய்திருக்கிறார் நடிகர் கருணாகரன்.

கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளை செவ்வாய்க்கிழமையன்று பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம், மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2 இடங்களில் மட்டும் அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவரிடம் நேரில் முறையிட அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். 

ஏற்கெனவே டெல்டா பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டதால் முதல்வரின் பயணம் பாதியிலேயே ரத்தானதாக கூறப்பட்டது. ஆனால், மழை காரணமாகவே முதல்வரின் பயணம் ரத்தானதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சேதப் பகுதிகளுக்குச் சென்றார். ஆனால், அங்கு மழை பெய்ததால் பாதியிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். இப்போது சென்னையில் மழை பெய்கிறது. இதனால் அவர் சென்னைக்கு திரும்புவாரா அல்லது டெல்லியிலேயே தங்கிவிடுவாரா?" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த சூழலில் கருணாகரன் இந்த ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in