

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் இப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர்கள் வசந்த பாலன், விக்னேஷ் சிவன், பாலா உள்ளிட்டோர் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகின்றனர். டிசம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்க்கக் காத்திருக்க முடியவில்லை என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
“படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. இதற்கு முன் ராஜீவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணையில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ உருவானபோது இருந்த மாயாஜாலத்தை மீண்டும் பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.