

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜன.14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று மும்பை சென்ற சிவகார்த்திகேயன் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்துப் பேசியுள்ளார். அவர் அலுவலகத்துக்கு சிவகார்த்திகேயன் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரம்மாண்ட படங்களை இயக்கும் சஞ்சய் லீலா பன்சாலியுடனான இந்தச் சந்திப்பை அடுத்து சிவகார்த்திகேயன் இந்தியில் உருவாகும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் தரப்பில் விசாரித்தபோது, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றனர்.