பல படங்களில் திருப்தியின்றி நடித்துள்ளேன்: சமந்தா

பல படங்களில் திருப்தியின்றி நடித்துள்ளேன்: சமந்தா
Updated on
1 min read

பல படங்களில் தனக்கு திருப்தி அளிக்காமல் நடித்திருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபமாக அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை, மேலும் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். உடற்பயிற்சி, வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவற்றில் தான் அதிகப்படியான நேரத்தினை செலவழித்து வருகிறார் சமந்தா.

இது தொடர்பாக சமந்தா அளித்துள்ள பேட்டியில், “இப்போது என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களை மட்டுமே செய்து வருகிறேன். அது சினிமா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி தான். முந்தைய காலங்களில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால், உண்மையைச் சொன்னால் அவற்றில் பல படங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

இப்போது எந்த சினிமாவாக இருந்தாலும் அதனை முழுமனதுடனும், கவனத்துடனும் செய்து வருகிறேன். ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற பயமெல்லாம் இப்போது இல்லை. என் உடல் என்ன சொல்கிறது என்பதை கேட்க வேண்டும் என்று புரிந்துக் கொண்டேன். அதனால் மட்டுமே வேலையை குறைத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in