

நேற்றைய எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு ரம்யா வெளியேற்றப்பட்டார்.
அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்த கமல் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கின் முடிவுகள் அனைவருக்கும் திருப்தியாக இருந்ததா என்பது பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.
கடந்த வாரம் பொன்னம்பலத்தின் அருகே அமர்ந்து கொண்டே யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஹிந்தியில் அவரை கழுவி ஊற்றியதை பற்றி கமல் கேட்டதும் ஆடிப் போன அவர்கள் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டனர். (குறும்படம் எல்லாம் கண்முன் வந்துபோகுமில்லையா?)
இந்த வார தலைவரான மஹத்தின் ’அருமை பெருமைகளை’ பற்றி விசாரித்த கமல் காலம் தாழ்த்தாமல் எலிமினேஷன் படலத்தை தொடங்கினார்.
ரம்யா, பாலாஜி, ஜனனி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா இந்த வார எலிமினேஷனுக்கு தெர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதில் யார் எலிமினேஷனுக்கு தகுதியானவர் இல்லை என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதுமே ஜனனி கையை தூக்கினார்.
தான் எப்போதும் அனைத்து வேலையையும் ஆர்வத்துடன் செய்வதாகவும் அதனால் அந்த காரணத்தை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றும் ஜனனி கூறினார்.
”அதனால்தான் மக்கள் உங்களை வெளியே போக அனுமதிக்கவில்லை” என்று ஜனனியை முதலில் காப்பாற்றினார் கமல்.மீதமிருக்கும் நால்வரில் அடுத்து காப்பாற்றப்பட்டவர் ஐஸ்வர்யா!
சென்றமுறை யாஷிகா விஷயத்தில் நடந்ததுதான் ஐஸ்வர்யா விஷயத்தில் நடந்திருப்பது போல் தெரிகிறது.
வழக்கம்போல பொன்னம்பலமும் காப்பாற்றப்பட்டார். இறுதியாக பாலாஜி, ரம்யா இருவரில் “எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு சார்” என்று ரம்யா சொன்னதுமே ’வெளில வாங்க” என்று அழைத்தார் கமல்.
கடந்த வாரங்களில் எலிமினேஷனை வளவள என்று இழுக்கிறார் என்ற பிக்பாஸ் ரசிகர்களின் கோரிக்கை கூட காரணமாக இருக்கலாம்.
அதன்படி இந்த வாரம் ரம்யா எலிமினேட் செய்யப்பட்டார். மற்றவர்களோடு ஒப்பிடும்போது ரம்யா மீது பெரிதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதேபோல அவர் எந்த சர்ச்சையில் சிக்கவில்லை. இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தது பாலாஜி அல்லது ஐஸ்வர்யாதான்.
அப்படியிருக்க சென்ற வாரம் நித்யா, இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டது குறித்து பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.