

தனது பேரன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர். தங்கள் மகனை இருவரும் ஒன்றாக கட்டியணைத்து வாழ்த்தும் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘பெருமைமிகு பெற்றோர்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் அவரது பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு .தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது மகனுக்காக இருவரும் இணைந்து ஒன்றாக பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
First milestone crossed my lovable grandson congratulations yathra kanna ! pic.twitter.com/D15JexNw4g