Published : 10 May 2025 06:33 AM
Last Updated : 10 May 2025 06:33 AM
வங்க மொழி எழுத்தாளர் நிருபமா தேவியின் ‘அன்னபூர்ணிகா மந்திர்’ என்ற நாவல் பல்வேறு மொழிகளில் அப்போது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நாவலை மலையாளத்தில் நாடகமாக உருவாக்கினார்கள். அதைத் தமிழில், ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் டி.கே.சி சகோதரர்கள் நாடகமாக மாற்றி நடத்தி வந்தனர். இந்த நாடகத்துக்கு அண்ணா, ‘குடியரசு’ இதழில் அற்புதமான விமர்சனம் ஒன்றை எழுதினார். மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தை ‘குமஸ்தாவின் பெண்’ என்று பெயர் மாற்றி திரைப்படமாக்கினர்.
நாடகத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஜெமினி பிலிம்ஸ் எஸ்.எஸ்.வாசன், அதில் நாயகியாக நடித்த நடிகையையே, சினிமாவிலும் நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ‘நடிகை’ அல்ல, நடிகர்தான்’ என்றதும் அவருக்கு ஆச்சரியம். அதில் பெண் வேடமிட்டு நடித்தவர் பின்னர் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் புகழடைந்த ஏ.பி.நாகராஜன்.
படத்தை பி.என்.ராவ் மற்றும் கே.வி. ஸ்ரீனிவாசன் இயக்கினர். ரஸ்தோம் எம்.இரானிஒளிப்பதிவு செய்தார். (கிருஷ்ணன்) பஞ்சு இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.மணி என்கிற பணக்காரரிடம் வேலைபார்க்கும் ராமசாமிக்கு சரசா, சீதா என 2 மகள்கள். பொருளாதார நிலை காரணமாக அவரால் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு செல்வந்தரான ராமுவுக்கு சீதாவைத் திருமணம் செய்து வைக்க ஆசைப் படுகிறார், ராமுவின் தாய். தனது சீர்திருத்தக் கொள்கைகளுக்குத் திருமணம் தடையாக இருக்கும் என்பதால் மறுக்கிறார் ராமு. இதனால் வயதான ஒருவருக்கு சீதாவைத் திருமணம் செய்து கொடுக்கிறார், ராமசாமி. அந்த வயதானவர் திடீரென இறந்துவிட, விதவையாகிறார் சீதா.
இதற்கிடையே பணக்காரர் மணி, சீதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறார். அவரை, ராமு காப்பாற்றுகிறார். தனது நிலையை நினைத்து மனமுடையும் சீதா, தற்கொலை செய்துகொள்கிறார். அவர் தற்கொலைக்கு, தானே காரணம் என நினைக்கும் ராமு, சரசாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அங்கு வரதட்சணை பிரச்சினை தலை தூக்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.
டி.கே.சண்முகம் ராமுவாக நடித்தார். டி.கே.பகவதி மணியாகவும் எம்.வி.ராஜம்மா சீதாவாகவும் நடித்தனர். ராமசாமியாக சுப்பையா பிள்ளை, சரசாக எம்.எஸ்.திரவுபதி, சீதாவின் வயதான கணவராக ‘ஃபிரண்ட்’ ராமசாமியும் நடித்தனர். மற்றும் கே.ஆர்.ராமசாமி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் அப்போது ரசிக்கப்பட்டன. நாராயணன் மற்றும் பத்மநாபன் பார்ட்டியின் இசையில் ‘பாறை மனிதா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்.
1941-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது இந்தப் படம். அந்த காலத்தில் இளம் பெண்களை, வயதான ஆண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது தாரமாக திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு, அதற்கு எதிராக இளைஞர்கள் கடுமையாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இதே கதையை மையப்படுத்தி ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் படம் இயக்கினார் ஏ.பி.நாகராஜன். 1974-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவகுமார், ஆரதி, கமல்ஹாசன் முக்கிய வேடங்களில் நடித்தனர். கமல்ஹாசன் இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT