''என் மீதான சிம்புவின் அன்பு குறையவே இல்லை'' - சந்தானம் உருக்கம்

''என் மீதான சிம்புவின் அன்பு குறையவே இல்லை'' - சந்தானம் உருக்கம்

Published on

“என் மீது சிம்பு வைத்துள்ள அன்பு, அக்கறை குறையவே இல்லை” என்று நடிகர் சந்தானம் உருக்கமாக பேசினார்.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சந்தானம் பேசும்போது, “சிம்பு இல்லையென்றால் நான் இங்கு இல்லை. அவர்தான் என்னை ‘மன்மதன்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். முதல் படத்துக்கு என்ன அன்பு, அக்கறை அவரிடம் இருந்ததோ அது இன்றுவரை குறையவே இல்லை.

இப்போது கூட அவரது 49-வது படத்தில் சந்தானத்தை இப்படத்தில் எப்படியெல்லாம் உபயோகிக்க முடியும் என்பதை யோசியுங்கள் என்று தான் இயக்குநரிடம் சொன்னார். இப்படிப்பட்ட அன்புடன் கூடிய ஒருவரை கொடுத்த எனக்கு கடவுளிடம்தான் நன்றி சொல்ல வேண்டும். எப்போதுமே அவருக்கு பின்னால் நான் நிற்பேன்.

இப்படத்தின் தயாரிப்பாளர் எனது உயிர் நண்பர்களில் ஒருவரான ஆர்யா. சினிமாவில் இதுவரை எதற்குமே இருவரும் பயந்ததே கிடையாது. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். இந்தப் படம் தொடங்கும் முன்பு ‘இந்தப் படம் மட்டும் பண்ணு, உன் பிரச்சினையை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன். உன் வேலை படத்தை ஜெயிக்க வைப்பது மட்டும் தான்’ என்றான். கண்டிப்பாக இந்தப் படத்தின் வெற்றியை ஆர்யாவுக்கு திரும்ப தருவேன்” என்று பேசினார் சந்தானம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in