Published : 29 Apr 2025 09:25 AM
Last Updated : 29 Apr 2025 09:25 AM

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஹாரர் காமெடி மட்டுமல்ல! - இயக்குநர் பிரேம் ஆனந்த் நேர்காணல்

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ வரிசையின் அடுத்த படமாக வெளியாக இருக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. நாயகியாக நடித்திருக்கிறார் கீத்திகா திவாரி. கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி என பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில். காமெடிக்கும் ஹாரருக்கும் பஞ்சமில்லாத படம் இது என்கிற இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், மிக்ஸிங்கில் பிசி. அவரிடம் பேசினோம்.

இயக்குநரா இது உங்களுக்கு இரண்டாவது படம்... எப்படி வந்திருக்கு?

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு நான் இயக்கி இருக்கிற படம் இது. இயக்குநரா எனக்கு இது 2-வது படமா இருந்தாலும் சந்தானத்தோட என் பயணம் ரொம்ப வருஷமா தொடருது. அவரோட ரசிகனா பழகி, பெரும்பாலான படங்கள்ல, அதாவது ‘சிவா மனசுல சக்தி’ தொடங்கி இப்பவரை நாங்க ஒரு டீமா அவருக்கு காமெடி எழுதியிருக்கோம். அதனால, ரசிகர்கள் அவர்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க அப்படிங்கறதை புரிஞ்சு, அதுக்கு ஏற்ற மாதிரியான காமெடி ஹாரர் படமா ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதுல சந்தானம் ரொம்ப ஸ்டைலா, லுக்காவே புதுசா தெரிவார்.

‘தில்லுக்குத் துட்டு’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படங்களுக்கும் இதுக்கும் என்ன கனெக்‌ஷன் இருக்கு?

இல்லை. நான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை இயக்கறதுக்கு முன்னால, நான் டைரக்ட் பண்றதுக்காக சந்தானம் சார்ட்ட சொன்ன லைன் இது. வழக்கமான கதையா இல்லாம வித்தியாசமா இருக்கும்னு சொன்னேன். கேட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்னவர், “கதையில கப்பல் வருது, வெளிநாட்டுக் காட்சிகள் இருக்கு, ஃபேன்டஸி விஷயங்கள் இருக்கு, பிரம்மாண்ட செட் வேணும், அதனால பட்ஜெட்டா பெருசா போகும். முதல் படத்தை அவ்வளவு பெரிய பட்ஜெட்ல பண்ண வேண்டாம். சின்ன பட்ஜெட்ல ஒரு படம் பண்ணி, சக்சஸ் பண்ணிட்டு இந்தக் கதையை பண்ணலாம்”னு சொன்னார். அப்படி உருவானதுதான் இந்தப் படம். இதுக்கும் முந்தைய பாகங்களுக்கும் கதையாக எந்த தொடர்பும் இல்லை.

சந்தானம் கேரக்டர் பெயர் ‘கிஸா 47’-ன்னு சொன்னாங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?

இதுவரை சந்தானம் சார் பண்ணினதுலயே பெரிய பட்ஜெட்ல உருவாகி இருக்கிற படம் இது. கதையை கேட்டுட்டு நடிகர் ஆர்யாவும் நிஹாரிகா நிறுவனமும் இணைஞ்சு இதை தயாரிச்சிருக்காங்க. சினிமா பற்றிய கதைதான். சந்தானம், ஒரு யூடியூப் சேனல்ல சினிமா விமர்சனம் பண்றவர். அவர் வாழ்க்கையில நடக்கிற ஒரு சம்பவம் அவரை எங்க கொண்டு போய் நிறுத்துதுன்னு கதை போகும். இதுல ஹாரர் மட்டுமில்ல, நிறைய ஜானர்கள் இருக்கு. வெளியாக இருக்கிற டிரெய்லர் பார்த்தீங்கன்னா, உங்களுக்கு கதை புரியும். சந்தானம் கேரக்டர் பெயர் ‘கிஸா 47’. அதாவது கிருஷ்ணமூர்த்தியோட ‘ஷார்ட் ஃபாம்’. 47 ஏன்னா, அவர் ஏகே 47 மாதிரி வார்த்தைகளை விடுறவர்.

கப்பல்ல ஷூட் பண்ணியிருக்கீங்களே..?

ஒரு பகுதி கதை கப்பல்ல நடக்கும். அதுக்காக மும்பையில இருந்து மாலத்தீவுக்கு போற 14 அடுக்கு கொண்ட பிரம்மாண்ட சொகுசு கப்பல்ல ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி, ஒரு ஏரியாவை பிளாக் பண்ணி, படப்பிடிப்பை நடத்தினோம். அதுல பொதுமக்களும் இருந்தாங்க. 15 நாட்கள் ஷூட் பண்ணினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது. படத்துல அந்தக் காட்சிகள் வியக்கிற மாதிரி இருக்கும்.

இதுல, கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் நடிச்சிருக்காங்க... சீரியஸான இயக்குநர்களை காமெடி பண்ண வச்சிருக்கீங்களா?

செல்வராகவன் சார் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கிற வில்லனா நடிச்சிருக்கார். கவுதம் வாசுதேவ் மேனன் சாரும் ஒரு லீட் ரோல் மாதிரிதான் பண்ணியிருக்கார். காமெடி கலந்த கேரக்டர்தான் அப்படின்னாலும் இதுவரை பார்க்காத கவுதம் சாரை இதுல பார்க்கலாம். அவர் ராகவன்ங்கற கேரக்டர்ல வர்றார். படத்துல அவர் சீரியஸா சில வேலைகள் பண்ணுவார். ஆனா, அவரைச் சுற்றி நடக்கிற விஷயங்கள், டார்க் ஹியூமராக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x