‘கேப்டன் பிரபாகரன்’ ரீ-ரிலீஸ்: 34 ஆண்டுக்குப் பின் 4கே தரத்தில் வெளியிட திட்டம்

‘கேப்டன் பிரபாகரன்’ ரீ-ரிலீஸ்: 34 ஆண்டுக்குப் பின் 4கே தரத்தில் வெளியிட திட்டம்

Published on

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

விஜயகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. அவரது நடிப்பில் வெளியான 100-வது படம் இதுவாகும். இப்படத்துக்குப் பிறகே கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக 4கே தரம் உயர்த்தப்பட்டு விரைவில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

பிலிம் விஷன் நிறுவனத்தின் ராமு இப்படத்தினை 4கே தரத்திலும், 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையில் ரீமாஸ்டர் செய்திருக்கிறார். இப்படத்தின் மறுவெளியீட்டு உரிமையினை முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றி இருக்கின்றன. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்து, விளம்பரப்படுத்த உள்ளார்கள்.

1991-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியானது. இதில் விஜயகாந்த், ரூபிணி, சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருந்தார். இப்படத்தின் காட்சி அமைப்புகள், சண்டைக் காட்சிகள், பாடல்கள் என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in