

‘டிராகன்’ படத்தின் வசூல் பன்மடங்கு அதிகரித்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டுவதும் உறுதியாகத் தெரிகிறது.
பிப்.21-ம் தேதி வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உலகமெங்கும் அந்நிறுவனமே விநியோகித்தது. முதல் நாளில் இப்படத்தைப் பார்த்தவர்களின் விமர்சனம் இணையத்தை ஆட்கொண்டது. இதனால் டிக்கெட் புக்கிங் ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.
முதல் இரு தினங்களில் மட்டும் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.28 கோடி அளவில் வசூல் செய்த நிலையில், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அதிக எண்ணிக்கையிலான திரைகளுடன் ஹஃவுஸ் காட்சிகள் கொண்டிருப்பதால், ரூ.35 கோடி அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘டிராகன்’, முதல் மூன்று நாட்களிலேயே எளிதில் ரூ.40 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதையச் சூழலில் ‘டிராகன்’ விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொடும் என்று கூறிவருகிறார்கள். ஏனென்றால், தமிழ், தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த வசூல் அதிகரிப்பால், ‘டிராகன்’ படக்குழுவினர் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
கெத்தான கல்லூரி வாழ்க்கை, அங்கு அவளே உலகமென இருக்கும் காதல், பேராசிரியர்களை மதிக்காத தெனாவட்டு, அரியருடன் வெளியேறி, பெற்றோரை ஏமாற்றும் பிழைப்பு, குறுக்கு வழி முன்னேற்றத்துக்காகச் செய்யும் ஒரு ஃபிராடுதனம், அதுவே ஒருநாள், வாழ்வின் மொத்த சுகத்துக்கும் எமனாக வந்து நிற்கும் துயரம் என ஓர் இளைஞனின் வாழ்வியலை, இயல்பாகவும் எங்கேஜிங்காகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.