பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி: பிப்.22-ல் நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது

பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி: பிப்.22-ல் நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது

Published on

அருண் ஈவண்ட்ஸ் சார்பில் பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.22-ம் தேதி நடைபெறுகிறது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சியாகும்.

தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா, பரதம், ஃபோக், வெஸ்டர்ன் வகைகளின் கலவையை தனது நடனத்தில் வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 1989-ல் வெளியான இந்து என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர், காதலன், லவ் பேர்ட்ஸ் என பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். குறிப்பாக மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்ததற்கு தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.

பின்னர் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவ்வாறு நடன இயக்குநர், நடனக் கலைஞர், நடிகர், திரைப்பட இயக்குநர் என பல்வேறு திறமைகளைக் கொண்டிருக்கும் பிரபுதேவா, இதுவரை தனது நடன நிகழ்வை லைவ் ஆக நடத்தியதில்லை. இந்நிலையில் முதன் முறையாக லைவ் நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் பிப்.22-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக பிரபுதேவா கூறியதாவது: இப்படியொரு நிகழ்ச்சி நான் நினைத்து கூட பார்த்ததில்லை. லைவ் நிகழ்ச்சி என்னும்போது சினிமாவில் பார்ப்பது போல் எதிர்பார்க்க முடியாது. அங்கு ஒரு பாடலுக்கு இடையில் ஏராளமான கட் இருக்கும். மேடையில் அப்படி முடியாது. தொடர்ச்சியாக 8 நிமிடங்கள் வரை ஆட வேண்டியிருக்கும். இதற்காக தொடர்ந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறேன். ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட 200 சதவீத திறமையான நடனத்தை வெளிப்படுத்துவேன். இந்நிகழ்ச்சி கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இயக்குநராக ஹரிகுமார் பொறுப்பேற்றுள்ளார். பங்குதாரராக இந்து தமிழ் திசை இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in