‘சினிமாவில் கவுண்டமணி யுகத்தை மறக்க முடியாது’ - பாக்யராஜ்

‘சினிமாவில் கவுண்டமணி யுகத்தை மறக்க முடியாது’ - பாக்யராஜ்
Updated on
1 min read

கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், 'ஒத்த ஓட்டு முத்தையா'. அரசியல் நையாண்டி படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, ராஜேஸ்வரி, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். சினி கிராஃப்ட் புரொடக் ஷன் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் சார்பில் எம்.ஈ. ரவிராஜா, கோவை லட்சுமி ராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.

இதன் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. கே. பாக்யராஜ், பி.வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் பி.வாசு பேசும்போது, ‘‘கவுண்டமணிக்கு மானேஜர் என்று யாரும் கிடையாது. அவரிடம் டிரைவரும் கிடையாது. டைரியும் கிடையாது. அனைத்தையும் மனதில் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வார். இவரைப் போன்ற எளிமையான, தயாரிப்பாளர்களுக்குச் சவுகரியமான நடிகர் தமிழ் திரையுலகில் வேறு யாரும் இல்லை. கவுண்டமணி அதிகம் நடித்தது என் இயக்கத்தில் உருவான படங்களில் தான். இதுவரை 24 படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.‌ அதில் 20 படங்கள் ஹிட்” என்றார்.

கே.பாக்யராஜ் பேசும்போது, “மணி பற்றி மணியான ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இதுவரை மூன்று யுகம் கடந்து விட்டதாகச் சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை இந்த யுகம் கவுண்டமணி யுகம். சினிமாவில் கவுண்டமணியின் யுகத்தை யாராலும் மறக்க முடியாது, மறுக்க முடியாது. இந்தப் படம் கவுண்டமணியின் பிராண்ட். அவருடன் ஒரே அறையில் இருந்தேன் என்பது பெருமிதமாக இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in