“யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது” - ‘ஏஐ’ வீடியோ குறித்து நடிகை பிரக்யா நாக்ரா வேதனை

“யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது” - ‘ஏஐ’ வீடியோ குறித்து நடிகை பிரக்யா நாக்ரா வேதனை
Updated on
1 min read

சென்னை: “இது ஒரு கெட்ட கனவு. இதை முழுமையாக இதை மறுக்கிறேன். இதுபோன்ற ’ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பாக இருக்கவும் நான் வேண்டிக்கொள்கிறேன்” என நடிகை பிரக்யா நாக்ரா தெரிவித்துள்ளார்.

‘ஏஐ’ மூலம் உருவாக்கப்பட்ட நடிகை பிரக்யா நாக்ராவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “இது ஒரு கெட்ட கனவு. முழுமையாக இதை மறுக்கிறேன். தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே தவிர, சீரழிப்பதற்கு அல்ல.

’ஏஐ’ மூலம் இப்படியான செயல்களை செய்பவர்களையும், அதனை பரப்புவோரையும் பார்த்தால் பரிதாபமே மேலோங்குகிறது. இப்படியான சூழ்நிலையில் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. இதுபோன்ற ’ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பாக இருக்கவும் நான் வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா. அடுத்து 2023-ல் வெளியான ‘N4’ படத்தில் நடித்தார். அதே ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘நதிகளில் சுந்தரி யமுனா’ மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்தார் பிரக்யா. அந்தப் படத்தில் யமுனா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த ஆண்டில் வெளியான ‘லக்கம்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in