சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார் 

சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார் 
Updated on
1 min read

சென்னை: சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டான்சர், நடிகர் என பன்முகம் கொண்ட நேத்ரன், ‘ஜோடி நம்பர் 1’ 3வது சீசன் மற்றும் 5வது சீசன், ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’, ‘சூப்பர் குடும்பம்’ உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றவர். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’, ‘ரஞ்சிதமே’ தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தடம் பதித்துள்ளார்.

இவர் சின்னத்திரை நடிகை தீபா என்பவரை காதலித்து மணமுடித்தார். அவர் ‘சிங்கப்பெண்ணை’ தொடரில் நடித்து வருகிறார். நேத்ரன் - தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள். அண்மையில் இவரது மூத்த மகள் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அப்பாவுக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நேத்ரன் புதன்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in