

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தன் காதலரின் பெயரையும், காதலையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஆண்டனியுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் சூரியனை பார்த்தவாறு பின்புறமாக திரும்பி நின்றுகொண்டிருக்கின்றனர். இதனை பகிர்ந்துள்ள கீர்த்தி, “15 ஆண்டு கால உறவு. எப்போதும் தொடரும். ஆண்டனி - கீர்த்தி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாக இருக்கிறது. தெலுங்கில் வெளியான ‘மகாநடி’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்த இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர்.
கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் தொடங்கி இன்றுவரை இருவரும் காதலர்களாக பயணித்து வருகின்றனர். இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் வரும் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டனியை பொறுத்தவரை கேரளாவில் உள்ள ரெசார்ட் ஒன்றின் உரிமையாளர் என்றும், துபாயில் தொழிலதிபராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.