‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ பாகம் 2 எப்போது? - செல்வராகவன் பதில்

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ பாகம் 2 எப்போது? - செல்வராகவன் பதில்
Updated on
1 min read

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ படங்களின் 2-ம் பாகங்கள் எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குநர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் பல்வேறு படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஆனால், சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘புதுப்பேட்டை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எப்போது என்ற கேள்வியே அதிகமாக இருக்கும். அது குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அதில், “கண்டிப்பாக ’புதுப்பேட்டை 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ வர வேண்டும். அனைவரையும் ஓர் ஆண்டு படப்பிடிப்புக்கு இணைப்பது கடினமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு படத்துக்கு ஓர் ஆண்டு இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதுள்ள காலத்துக்கு ஏற்றவகையில் எழுத்தும் மாற வேண்டும்.

நான் உயிர் வாழும்வரை இதன் 2-ம் பாகங்களுக்கு முயற்சித்துக் கொண்டே இருப்பேன். இரண்டு படங்களையும் திரையில் காண வேண்டும் என்ற ஆர்வம் எனக்கே இருக்கிறது. ‘புதுப்பேட்டை 2’ கதை அந்தப் பையனின் வாழ்க்கையை மையப்படுத்தி இருக்கும். 70-80% கதை தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் செல்வராகவன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in