“அதீத இரைச்சல், காதில் ரத்தம்” - ‘கங்குவா’ படத்தின் ஒலி தரம் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்

“அதீத இரைச்சல், காதில் ரத்தம்” - ‘கங்குவா’ படத்தின் ஒலி தரம் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்
Updated on
1 min read

சென்னை: சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலி தரம் அதீத இரைச்சலுடன் இருப்பதாக படம் பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வியாழக்கிழமை (நவ.14) திரையரங்குகளில் வெளியானது.

தமிழின் முதல் பான் இந்தியா படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இப்படம் காலை முதலே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சூர்யாவின் நடிப்பு, புரொடக்‌ஷன் வேல்யூ, ஆடை அலங்காரம், கலை இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்டவை பாராட்டுகளை பெற்றாலும், படத்தின் திரைக்கதை பலவீனமாக இருப்பதால் இவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக தேவையே இல்லாமல் பலரும் கத்திக் கோண்டே இருப்பதும், பின்னணி இசை என்ற பெயரில் அதீத இரைச்சலும் காதில் ரத்தம் வராத குறைதான் என்று படம் பார்த்த இணையவாசிகள் பலரும் கூறுகின்றனர்.

குறிப்பாக சூர்யா ரசிகர்களே கூட இந்த குறையை படக்குழுவினரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டு முறையிட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு படக்குழு வரும் நாட்களில் படத்தின் ஒலி தரத்தை மேம்படுத்தவோ அல்லது இரைச்சலான பின்னணி இசையை மாற்றவோ செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in