தமிழ் சினிமாவை ‘கங்குவா’ அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்: சூர்யா நம்பிக்கை

தமிழ் சினிமாவை ‘கங்குவா’ அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்: சூர்யா நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: “‘கங்குவா’ திரைப்படம் வெறுமனே ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பை பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும். ‘கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் 3டி ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா பேசியதாவது, “கங்குவா போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம்.

170 நாட்களுக்கும் மேல் இந்த படத்தை எடுத்திருப்போம். ’கங்குவா’ படத்தில் அனைவரது உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. வெற்றியுடைய ஒளிப்பதிவு நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிதாக பேசப்படும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன்னால் நான் பத்தாவது மாடியில் இருந்து கூட குதிப்பேன். அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை எனக்கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு கதை வைத்து அசத்திவிடுவார். படத்தின் ஆன்மா இசைதான்.

அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம்.

‘கங்குவா’ திரைப்படம் வெறுமனே ஆக்‌ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு. மன்னிப்பை பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும். ‘கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 3000 பேரின் உண்மையான உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். படம் நெருப்பு மாதிரி இருக்கும். உங்கள் அன்பு ‘கங்குவா’ படத்திற்கு தேவை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in