‘அமரன்’ படத்துக்கு முழு வரிவிலக்கு வழங்க செல்வப்பெருந்தகை கோரிக்கை

‘அமரன்’ படத்துக்கு முழு வரிவிலக்கு வழங்க செல்வப்பெருந்தகை கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: ராணுவ வீரர்களின் நாட்டுப் பற்றை தத்ரூபமாக எடுத்துக் காட்டியுள்ள அமரன் திரைப்படத்துக்கு முதல்வர் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயனை மிகச் சிறப்பாக நடிக்க வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ திரைப்படத்தை பார்க்கிற அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்தப் படத்தை பார்த்து மட்டற்ற மகிழச்சியும், மன நிறைவும் அடைந்தேன். காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைப்போல தத்ரூபமாக அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்களை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. துணிந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மிடுக்கான தோற்றப் பொலிவு, கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு, வீரத்தையும், தியாகத்தையும் ஒருசேர உணர்த்துவதில் அபார சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். காலத்தால் அழியாத கருவூலமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு என்றும் பேசப்படும், போற்றப்படும்.

அமரன் திரைப்படம் பயங்கரவாதத்தை முறியடிக்க, நமது ராணுவ வீரர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து நாட்டுப் பற்றோடு எத்தகைய தியாகத்தையும் செய்ய முனைகிறார்கள் என்பதை இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உணர்த்துகிறது. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடித்த சாய் பல்லவி, படத்தை பார்க்கிறவர் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறார். அவர் நடிக்கவில்லை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அனைவரது பாராட்டையும் வெற்றிருக்கிறார்.

நமது மண்ணையும், நாட்டையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் தெளிவாக உணர்த்துகிறது. இத்திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக அவர்களிடையே நாட்டுப் பற்று நிச்சயம் வளரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இது இன்றைய காலத்தில் மிகமிக அவசியமாகும்.

அமரன் திரைப்படத்துக்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in