‘பொய் வழக்கால் மன உளைச்சல்’ - சினிமா பைனான்சியர் வழக்கில் கஸ்தூரி ராஜா ஆஜராக சம்மன்

கஸ்தூரி ராஜா | கோப்புப் படம்
கஸ்தூரி ராஜா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பொய் வழக்கு தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக சினிமா பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் இயக்குநர் கஸ்தூரி ராஜா வரும் நவ.15 அன்று நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சினிமா பைனான்சியரான ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சினிமா பைனான்சியரான எனது தந்தை முகுந்த் சந்த் போத்ரா, திரைப்பட இயக்குநரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக ரூ.65 லட்சம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். தந்தை இறப்புக்குப் பிறகு அந்த வழக்கை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்நிலையில் அந்த காசோலை மோசடி வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கஸ்தூரி ராஜா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக பொய்யாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் கொடுத்த நிரப்பப்படாத காசோலையை நானும், எனது தந்தையும் நிரப்பி அவரை மோசடி செய்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

அந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. எனவே எனக்கும் எனது தந்தையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும்,எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கஸ்தூரி ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் 8-வது பெருநகர குற்றவியல் நடுவர் தாமோதரன், திரைப்பட இயக்குநரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்துாரி ராஜா வரும் நவ.15 அன்று நேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in