Published : 07 May 2024 07:40 PM
Last Updated : 07 May 2024 07:40 PM

“ஒரு பாடலுக்கு மொழி என்பது உடல் என்றால், இசை என்பது உயிர்” - சீமான் சொன்ன விளக்கம் 

சென்னை: “மொழியை உடலாக எடுத்துக்கொண்டால், இசையை உயிர் மூச்சாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் பிரிக்க முடியாது” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சீமானிடம், ‘ஒரு பாடல் வெற்றிபெற இசை முக்கியமா? அதன் வரிகளா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கல்வியா, செல்வமா, வீரமா என்பது போல ஒரு கேள்வி. அப்படியில்லை. பாடல் வரிகளா? இசையா? என கேட்டால் இரண்டுமே முக்கியம்தான். வரிகள் இல்லாத இசையை நாம் ரசித்துள்ளோம்.

இசையில்லாத வரிகளை கவிதையாக படிக்கும்போதும் ரசிக்கிறோம். இரண்டையும் ஏன் பிரிக்க வேண்டும். மொழி என்பது உடல் என்றால், இசை என்பது உயிர் என வைத்துக்கொள்ளுங்கள். அதை ஏன் பிரித்துகொள்ள வேண்டும். இளையராஜா கேட்கும் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும். படைப்பாளிக்கான அங்கீகாரம் வேண்டும். நியாயமான உரிமையை தான் இளையராஜா கேட்கிறார். எனக்கு உரியதை கொடுங்கள் என கேட்கிறார்” என்றார்.

பின்னணி: இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு நீதிபதி “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” ” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள நிலையில், சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டடது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x