Published : 23 Apr 2024 05:02 PM
Last Updated : 23 Apr 2024 05:02 PM

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க கட்டிடம்: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமை பெற ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ரூ.1 கோடியும், நடிகர் விஜய் ரூ.1 கோடியும் நிதியுதவி வழங்கினர். நேற்று (ஏப்.22) தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கின. இது தொடர்பாக நடிகர் விஷால் கூறும்போது, “இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x