Published : 17 Apr 2024 05:58 AM
Last Updated : 17 Apr 2024 05:58 AM

மாற்றுத் திறனாளிகளுக்காக படம் எடுக்கிறார் ராகவா லாரன்ஸ்

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய, மல்லர் கம்பம் சாகசக் கலையில் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். நடிகர் ராகவா லாரன்ஸின், ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு இதை இப்போது கற்றுள்ளது. இவர்கள் பங்கேற்ற சாகச நிகழ்வு, பத்திரிகையாளர்கள் முன் நடத்தப்பட்டது.

பின்னர், நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது: எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுதான். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், இவர்களை ஆட வைப்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ கற்றுக்கொள்கிறோம் என்றார்கள். அது, வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா ? எனக் கேட்டேன். முடியும் என்றார்கள். கற்றுக்கொண்டார்கள். இங்கு அவர்கள் செய்வதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்கள் வாடகை செலுத்தக் கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் விழாக்களில், தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இந்தக் கலை இவர்களை வாழ வைக்கும். இவர்கள் அனைவருக்கும் நான் ஸ்கூட்டி வழங்குகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு படமும் எடுக்க இருக்கிறேன். அதன் மூலம் வரும் வருமானத்தில், வீடுகட்டி கொடுக்க இருக்கிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார். இக்கலையை கற்றுக்கொடுத்த ஆதித்யன் மற்றும் குழுவினரையும் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x