Published : 28 Feb 2024 09:51 PM
Last Updated : 28 Feb 2024 09:51 PM

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்!

சென்னை: மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சிதம்பரம் இயக்கியுள்ளார். தமிழகத்தில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் இளையராஜாவின் பாடலும், கமலின் ‘குணா’ பட ரெஃபரன்ஸ்களும் நிரம்பியுள்ளன.

படத்தின் இயக்குநர் சிதம்பரம் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் மிகப்பெரிய கமல்ஹாசன் ரசிகன். கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்ல சிறந்த இயக்குநரும் கூட. அவர் இயக்கிய விருமாண்டி போன்ற படங்கள் அட்டகாசமானவை. அவர் சினிமாவுக்காகவே பிறந்தவர். இன்றைக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருக்கிறது. மொபைலில் கூட படம் எடுத்துவிடலாம்.

ஆனால், 1990 களில் அவர் எப்படி ‘குணா’ படத்தை எடுத்தார் என்பது வியப்பாக இருக்கிறது. அதுவும் படத்தின் பெரும்பகுதி அந்த குகையில் நடக்கும். நினைத்தாலே வியப்பாக இருக்கிறது” என பாராட்டி பேசியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘குணா’ படத்தை இயக்கிய சந்தானபாரதியும் அவர்களுடன் உள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ்: சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் கடந்த 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x