Published : 24 Feb 2024 04:04 PM
Last Updated : 24 Feb 2024 04:04 PM

“கெஞ்சிக் கேட்கிறேன்... தவறாகப் பேசாதீர்கள்!” - த்ரிஷா அவதூறு பிரச்சினையில் மிஷ்கின் உருக்கம் 

சென்னை: “நம் வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி தவறாக பேசுவோமா? நம் தாயைப் பற்றி தவறாகப் பேசுவோமா? தயவு செய்து, பெண்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள். நான் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என நடிகை த்ரிஷா மீதான அவதூறு கருத்துகள் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.

‘டபுள் டக்கர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “ஸ்டூடியோவில் வேலைப் பார்த்துகொண்டிருக்கும்போது த்ரிஷா குறித்து அவதூறாக பேசிவிட்டதாக என்னுடைய உதவி இயக்குநர்கள் கூறினார்கள். மிகவும் வருத்தப்பட்டேன். சாவித்ரி, மனோரமா, கே.ஆர்.விஜயா, சரோஜா தேவியைப் பார்த்து வளர்ந்துள்ளோம். அவர்கள் என்னுடைய தாய்கள்.

ஒரு நடிகையைப் பற்றி எளிதாக பேசிவிடாதீர்கள். நான் இரண்டு முறை தான் த்ரிஷாவை நேரில் பார்த்துள்ளேன். எளிமையான பெண். மென்மையாக பேசுபவர். அவர் குறித்து அவதூறாக யார் பேசினார், எப்படி பேசினார் என்பது குறித்த விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. நம் வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி தவறாக பேசுவோமா? நம் தாயைப் பற்றி தவறாக பேசுவோமா? தயவு செய்து பெண்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள். நான் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

நடிகையாக இருப்பவர் எவ்வளவு சிரமப்படுவார் என்பது எனக்குத் தெரியும். வாழ்க்கையில் மிக உன்னதமான நிலையை அடைய வேண்டும் என கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். உங்கள் மகள், தங்கையைப் போல நினைக்க வேண்டும். காதலியாக நினைக்கலாம், அதில் தவறில்லை. ஆனால், அதில் கண்ணியம் இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசாதீர்கள். குறிப்பாக நடிகைகளைப் பற்றி பேசாதீர்கள். ஒரு பெண்ணை அழ விடாதீர்கள். கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x