யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்; ரசிகர்கள் காயம்

யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்; ரசிகர்கள் காயம்
Updated on
1 min read

பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழாவும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலா மாஸ்டர், தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சிவா, கேபிஒய் பாலா, புகழ், சாண்டி மாஸ்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திறந்த வெளி அரங்கில் நடந்த விழாவில், கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியிருந்தவர்களுக்கு முன் பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இலவசமாக பார்க்கும் வகையில் பின் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில், தடுப்பை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் மேடை அருகே முன்னேறி கூச்சலிட்டதால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சிலர் மயங்கி விழுந்தனர். பலர் காயமடைந்தனர்.

காவல்துறை அதிகாரிகள், நடிகை ரம்பா உள்ளிட்டோர் ரசிகர்களிடம் அமைதியாக இருக்கும்படி கோரிக்கை வைத்தனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in