விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நாயகனாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நாயகனாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி
Updated on
1 min read

சென்னை: மறைந்த நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமாகும் புதிய படத்தை விஷ்ணு வர்தன் இயக்கி வருகிறார். விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன் ‘ஷெர்ஷா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து சல்மான் கானை வைத்து படம் ஒன்றையும் இயக்குகிறார். இந்நிலையில், தற்போது அவர் ஆகாஷ் முரளியை வைத்து ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துவருகிறார். தவிர சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.

காதல் கதையாக உருவாகும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in