“யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை” - ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சர்ச்சை குறித்து சந்தானம்

“யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை” - ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சர்ச்சை குறித்து சந்தானம்
Updated on
1 min read

சென்னை: “மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர, யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சந்தானம், “2 இயக்குநர்கள் படங்களில் நான் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பேன். ஒன்று ப்ரேம் ஆனந்த், மற்றொன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி. காரணம் படத்தில் அவ்வளவு ஹியூமர் இருக்கும். இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு எனக்கு மற்றொரு ஹிட் தேவைப்படுகிறது.

அது கார்த்திக் மூலம் கிடைக்க இருப்பது மகிழ்ச்சி. படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியது. இதில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால், நானும், இயக்குநரும் கவுண்டமணியின் ரசிகர்கள். ‘டிக்கிலோனா’ அவருடைய டயலாக். அப்படித்தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் வசனம் தான் இது. நான் சினிமாவுக்கு வந்தது நோக்கம் மக்களாகிய உங்களை சிரிக்க வைக்க வேண்டும்.

மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. கடவுளுக்குத் தெரியும். காசு, பணத்தை நோக்கி போக வேண்டியிருந்தால் போயிருப்பேன். அடுத்து புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in