“இனி என் படங்களில் அனைவருக்கும் ஒரே வகையான உணவு” - விஜயகாந்த் நினைவிடத்தில் அருண் விஜய் உறுதி

“இனி என் படங்களில் அனைவருக்கும் ஒரே வகையான உணவு” - விஜயகாந்த் நினைவிடத்தில் அருண் விஜய் உறுதி

Published on

சென்னை: இனி தான் நடிக்கும் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளிலும் அனைவரும் ஒரே விதமான உணவு வழங்கப்படும் என்று நடிகர் அருண் விஜய் உறுதியளித்துள்ளார். விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் அருண் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஒன்றரை மாதம் கழித்து இப்போதுதான் வெளியே வருகிறேன். விஜயகாந்த் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தி. சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு ரஜினி, கமல் போல ஆகவேண்டும் என்றுதான் எண்ணம் இருக்கும். ஆனால் விஜயகாந்த் போல சண்டைக்காட்சிகளில் புதுமை செய்து மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்றுதான் நான் சினிமாவுக்கு வந்தேன்.

ஒரு சிறந்த மனிதரை தமிழ்த் திரையுலகும், தமிழ் மக்களும் இழந்துவிட்டோம். இனி நான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களில் அனைவருக்கும் ஒரேவிதமான உணவு வழங்கப்படும் என்பதை அவருடைய நினைவிடத்தில் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையும், அதை நிச்சயம் நடிகர் சங்க நிர்வாகிகள் முன்னின்று செய்வார்கள் என்று நம்புகிறேன்” இவ்வாறு அருண் விஜய் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in