நகைச்சுவை கலந்த த்ரில்லர்: ஃபஹத் பாசில் - வடிவேலு இணையும் பட அப்டேட்

நகைச்சுவை கலந்த த்ரில்லர்: ஃபஹத் பாசில் - வடிவேலு இணையும் பட அப்டேட்

Published on

சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசிலும், வடிவேலும் இணையும் புதிய படம், நகைச்சுவை கலந்த த்ரில்லரில் உருவாக இருப்பதாகவும், படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலுவும், ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

கதை என்ன? - நாகர்கோயிலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இருவரின் சாலைப் பயணம் பற்றிய கதை. வடிவேலும், ஃபஹத் பாசிலும் மேற்கொள்ளும் இந்தப் பயணம் நகைச்சுவையுடன் தொடங்கி, த்ரில்லர் கதைக்களத்துடன் முடியும் என கூறப்படுகிறது. மேலும், இப்படம் சமூக பிரச்சினையை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டரும் கூட சாலைப்பயணத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜனவரி 22-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in