Published : 20 Dec 2023 10:02 AM
Last Updated : 20 Dec 2023 10:02 AM

“என் கலையும் கடமையும்...” - சமூக வலைதள விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் சென்றது சர்ச்சையான நிலையில், அது தொடர்பான விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, குமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு அதிகனமழை பெய்யத் தொடங்கியது. 17-ம்தேதி முழுவதும் பெய்த அதிகனமழை 18-ம் தேதி காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் 4 மாவட்டங்களும் மழை நீரால் சூழப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மின்சாரம்,போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர்மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான மாரி செல்வராஜ் தனது சொந்த ஊரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். மேலும் உதவி தேவைபடுபவர்கள் குறித்த விவரங்களையும் தனது பக்கத்தில் பகிர்ந்து வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றும் களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நெல்லையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி பார்வையிடச் சென்ற நிலையில், மாரி செல்வராஜும் அவருடன் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

அமைச்சர் உடனான ஆய்வில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை? என்று சிலர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல... நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x