Published : 08 Dec 2023 04:05 PM
Last Updated : 08 Dec 2023 04:05 PM

தமிழில் இயக்குநராக அனுராக் காஷ்யப் அறிமுகம்?

சென்னை: இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் இயக்க உள்ளதாகவும், அதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில், ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு கவனத்துக்குரிய படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ராகுல் பாட், சன்னி லியோன் நடித்துள்ள ‘கென்னடி’ படம் இவரது அடுத்த படைப்பாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் வெளியான ‘லியோ’வில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார்.

இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் இயக்க உள்ளதாகவும், அதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், “அனுராக் காஷ்யப் என்னை அவர் படத்தில் நடிக்க கூப்பிட்டார்” என தெரிவித்திருந்தார். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x