நடிகை வனிதா மீது மர்ம நபர் தாக்குதல் - ’பிக்பாஸ்’ பிரதீப் ஆதரவாளர் என்று குற்றச்சாட்டு

நடிகை வனிதா மீது மர்ம நபர் தாக்குதல் - ’பிக்பாஸ்’ பிரதீப் ஆதரவாளர் என்று குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: பிக்பாஸ் தொடர்பான பேட்டி ஒன்றை முடித்துவிட்டு செல்லும்போது தன் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுதவிர தனியார் ஊடகங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (நவ.26) பதிவிட்டுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா’ என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாக வனிதா அப்பதிவில் கூறியுள்ளார். மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரதீப்புக்கு எதிராக தனது கருத்துகளை வனிதா சமூக வலைதளங்களில் முன்வைத்து வந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in