Published : 18 Oct 2023 12:33 PM
Last Updated : 18 Oct 2023 12:33 PM

“இங்கு ‘லியோ’ படம் திரையிடப்படாது” - ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்ட போர்டு

சென்னை: கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் ‘இங்கு லியோ திரைப்படம் திரையிடப்படாது’ என்று எழுதப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை (அக். 19) வெளியாக உள்ளது. த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

இப்படத்துக்கு மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. கடந்த 14ஆம் தேதி முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. எனினும் சென்னையின் முக்கிய திரையரங்குகள் இன்னும் புக்கிங் திறக்கவில்லை. நேற்று (அக்.17) எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனர் அர்ச்சனா கல்பாத்தி, விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாததால் டிக்கெட் புக்கிங் தாமதமாகும் என்று தெரிவித்திருந்தார்.

இதே நிலை ரோகிணி, வெற்றி, கமலா, தேவி உள்ளிட்ட திரையரங்குகளிலும் நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் ‘இங்கு லியோ திரைப்படம் திரையிடப்படாது’ என்று எழுதப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியான அன்று ரோகிணி திரையரங்கில் இலவசமாக திரையிடப்பட்டது. அப்போது அங்கு வந்த ரசிகர்கள் இருக்கைகளை கடுமையாக சேதப்படுத்திவிட்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x