படுக்கையை பகிர்ந்துகொள்ளும் முறையை ஒழிக்க ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்: ஸ்ருதி ஹரிஹரன் அழைப்பு

படுக்கையை பகிர்ந்துகொள்ளும் முறையை ஒழிக்க ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்: ஸ்ருதி ஹரிஹரன் அழைப்பு
Updated on
2 min read

சினிமா துறையில் புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களுக்கும், ஏற்கெனவே  துறையில் இருக்கும் நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் காலம் கனிந்துவிட்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மனம் திறந்துள்ளார்.

இவர் அண்மையில் அர்ஜூனுடன் 'நிபுணன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திரைத்துறயில் உள்ள பாலியல் தொந்தரவு தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில் திரைத்துறையில் 'படுக்கையை பகிரும்' நிர்பந்தம் குறித்து நான் கூறியது எல்லாம் உண்மையே. அதேவேளையில் இதை தவிர்க்கவே முடியாது என்று நான் சொல்ல மாட்டேன்.

இப்படி ஒரு நிர்பந்தம் திரைத்துறையில் இருக்கிறது என நான் கூறுவதால் திரைத்துறை குறித்து தவறான பிம்பத்தை உருவாக்க முயலவில்லை. உண்மையில் திரைத்துறை மிகவும் அற்புதமானது. எனது திறமைக்கு தீனி போடும் துறை. நான் இத்துறையை நேசிக்கிறேன். எனது திறமைக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவையும் அன்பையும் கண்டு ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன். எனது குடும்பமும் எனது வளர்ச்சியில் பெருமிதம் கொண்டுள்ளது.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். 'படுக்கையை பகிரும்' நிர்பந்தத்துக்கு என்னைப்போல் நிறைய நடிகைகள் பழியாகியிருக்கின்றனர். அதே வேளையில் துணிவுடன் முடியாது என்று சொல்பவர்களையும் எனக்குத் தெரியும். ஒரு பட வாய்ப்பு கையைவிட்டுப் போகும் எனத் தெரிந்தும் முடியாது என்று சொல்வது மிகப்பெரிய விஷயம்.

 'படுக்கையை பகிரும்' நிர்பந்தத்துக்கு அடிபணிவதால் முதல் வாய்ப்பை வேண்டுமானால் பெற முடியும். ஆனால், துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அதற்கு திறமை வேண்டும். தொழில்ரீதியாக நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். இனி, நாம் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

காலம் மாறி வருகிறது. திரைத்துறையில் சில உன்னத மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். அத்தகைய நபர்களோடு பணியாற்ற காத்திருக்கிறேன். எனவே, திரைத்துறையில் ஒட்டுமொத்த ஆண்களையும் நாம் குற்றம் கூறக்கூடாது.

ஒரு சிலர் நடிகைகளிடம் பாலுறவை எதிர்பார்க்கின்றனர் என்றால் அவர்களுக்கு சில பெண்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். அதனால், எல்லோரும் அப்படி ஒத்துழைப்பார்கள் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு கைகள் இணைந்தால்தானே ஓசை வரும்.

இது 2018-ம் ஆண்டு. இப்போது திரைத்துறைக்கு நிறைய நடிகைகள் வந்துவிட்டனர். அவர்களில் பலரும் வெற்றி நாயகிகளாக உள்ளனர். அதுவும் யாருடைய நிர்பந்தத்துக்காகவும் படுக்கையை பகிர்ந்து கொள்ளாமலேயே தங்களை நிறுவியுள்ளனர். அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்.

படுக்கையை பகிர்ந்து கொள்ளும் முறை அழிக்கப்பட வேண்டியது. அதற்கு திரைத்துறையில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

முடியாது என்று சொல்லும் தைரியம் வேண்டும். படுக்கையைப் பகிர்தலுக்கு மட்டுமல்ல வேறு எந்த மாதிரியான பாலியல் சீண்டலுக்கும் பெண்ணின் மாண்பை குறைக்கும் எவ்வித செயலுக்கும் முடியாது என நாம் உரக்கச் சொல்ல வேண்டும்.

அப்படிச் செய்தால் மட்டுமே, இனி ஓர் இளம்பெண் சினிமா கனவை அவள் வீட்டில் தெரிவிக்கும்போது, 'உனக்கு என்ன பைத்தியமா? சினிமா துறை எவ்வளவு அழுக்கானது தெரியுமா? உன் குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. ஒழுங்கா போய் படி... ஏதாவது உருப்படியாக செய்.' என்ற பதில் பெற்றோர், குடும்பத்தினரிடம் இருந்து வராமல் இருக்கும்.

இது தனி ஒருவரால் செய்து முடிக்கக்கூடிய விஷயம் இல்லை. எனவே, பெண்கள் மட்டுமல்ல நல்லுள்ளம் கொண்ட ஆண்களும் குரல் கொடுக்க வேண்டும். ஆணாதிக்கம் ஒழிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆமென்.

இவ்வாறு ஸ்ருதி ஹரிஹரன்  கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in