சென்சார் போர்டில் ஊழல் | “இன்றே விசாரணை” - விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில்

சென்சார் போர்டில் ஊழல் | “இன்றே விசாரணை” - விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில்
Updated on
1 min read

சென்னை: சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தெரிவித்த புகாருக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் அண்மையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை திரையிடலுக்கு ரூ.3.5 லட்சம் மற்றும் சென்சார் சான்றிதழுக்கு ரூ.3 லட்சம் என இரு தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் விஷாலின் இந்தப் புகாருக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்சார் போர்டு ஊழல் விவகாரத்தை நடிகர் விஷால் முன்வைத்தது மிகவும் துரதுர்ஷ்டவசமானது. அரசாங்கம் ஊழலை சற்றும் பொறுத்துக் கொள்ளாது.

இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார். jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்சார் வாரியத்தால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in